நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாரம்பரிய மலை ரயில் கடந்த 1898-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்த ரயில்சேவை 1980-ல் உதகை வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஆடர்லி, ஹில்குரோவ், ரன்னிமேடு ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பாதை வழியாக இந்த ரயிலில் பயணிக்க பல்வேறு மாநிலத்தவரும் விரும்பி வந்துசெல்வர்.

நூற்றாண்டை கடந்த உதகை மலை ரயிலுக்கு 2005-ம் ஆண்டு ஜூலை 15ம் தேதியன்று யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து விருதினை வழங்கி கவுரவித்தது.
இன்றுடன் பாரம்பரிய அந்தஸ்து பெற்று 12-ஆண்டுகள் நிறைவுபெற்று 13-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்தகைய பெருமை மிக்க மலை ரயிலை நீராவியால் இயக்க பயன்படுத்தப்பட்ட இன்ஜினை காட்சிப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காட்சிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ரயில்வே அறக்கட்டளை சார்பில் 13ம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது. இதில், தோடர் இன மக்கள், இரயில் பயணிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள், சிட்டிசன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பின் நிர்வாகிகள் பரமேஷ்வரன், ஜெபரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டார்.